பட்டினப்பாலை - பொருட்சுருக்கம்
பட்டினப்பாலை – பொருட்சுருக்கம்
காவிரியின் சிறப்பும் சோழ நாட்டின் செல்வச் செழிப்பும்
குற்றமற்ற புகழுடன் விளங்குகின்ற வெள்ளி என்று அழைக்கப்படும் கோள்
(சுக்கிரன்), தான் இருக்கும் வடதிசையில் இல்லாமல் மாறுபட்டு, தெற்குத்திசையில்
சென்றாலும், வானத்தை நோக்கிப் பாடுகின்ற, மழைத்துளிகளை உணவாகவுடைய வானம்பாடி என்னும் பறவை மழைத்துளி இல்லாமல்
வருந்துமாறு, மேகம் மழை பெய்தலைத் தவிர்த்தாலும்,
தான் பொய்யாமல், குடகு மலையில் தோன்றிக் கடலில் சேரும் காவிரி, நீர் பெருகி, சோழ
நாட்டுக்கு வளம் சேர்க்கும். குலைகளையுடைய தென்னையும், வாழையும், பனை மரங்களும்,
காய்களையுடைய பாக்குமரங்களும், மணம் மிகுந்த மஞ்சள் செடிகளும், பல விதமான
மாமரங்களும். கிழங்கையுடைய சேம்பும், முளையையுடைய இஞ்சிச் செடிகளும் மருத
நிலங்களில் நிறைந்திருக்கும்.
சமணரும் பௌத்தரும் தவம் செய்யும் இடங்களில் கூடி, தழைத்துத் தாழ்ந்து வளர்ந்த மரங்களுடைய சோலைகளில், முனிவர்கள் தீயில் பொருட்களை இட்டு வேள்வி செய்வதால் தோன்றிய மணமுள்ள புகையை வெறுத்து, ஆண்குயில் தன்னுடைய பெண்குயிலோடு, நிலைகுலைந்து, அவ்விடத்தை விட்டு நீங்கி, பூதம் காக்கும், அச்சத்தைத் தரும், காவலுடைய காவிரிப்பூம்பட்டினத்திற்குச் சென்று, உணவோடு சிறு கற்களையும் தின்னும் அழகிய புறாக்களோடு தாமும் ஒதுக்கிடத்தில் தங்கும்.
முதிர்ந்த
மரங்களையுடைய போர்க்களத்தில், காற்றால் வரிவரியாகக் குவிக்கப்பட்ட மணலுடைய அகன்ற
மேடுகளில், பெரிய கூட்டமாக உறவினரும், ஒரே இனத்தைச் சார்ந்த சுற்றத்தாருமாகிய
வலிமையான தொழில் புரியும் செருக்குடைய மறவர்களுள் ஒருசாரார் கடலில் உள்ள இறாமீனின்
தசையைச் சுட்டுத் தின்பர். மற்றொருசாரார் வயலில் உள்ள ஆமையின் அவித்த இறைச்சியைத்
தின்பர். அங்கு, ஒருசாரார் வறண்ட மணலில் படர்ந்த அடப்பம் பூவைத் தலையில் சூடியும்,
வேறுசிலர் நீரில் உள்ள அல்லிப்பூவைச் சூடியும், நீலநிறத்தையுடைய வானத்தில் வலமாக
எழுந்து திரியும் நட்சத்திரங்களுடன் கலந்த கோள்களைப் போல் அகன்ற இடத்தையுடைய
மன்றத்தில் பலரோடும் கூடிச் சண்டையிடுவர்.
அவர்கள் கையாலும் கருவியாலும் உடலில் படுமாறு தீண்டிப் போர் செய்த பொழுது,
அங்குத் தோன்றிய பெருஞ்சினத்தால் ஒருவருக்கொருவர் பின்வாங்காமல் பெரிதாகப்
போரிட்டு தங்கள் வலிமையைக் காட்டி, அவர்கள் கவணால் எறிந்த கல்லுக்கு அஞ்சி,
புள்ளிகளையுடைய பறவைகள் பனைமரத்தை விட்டு நீங்கும்.
குட்டிகளையுடைய பன்றிகளும், பலவகையான கோழிகளும் உறைக்கிணறுகள் இருக்கின்ற காவிரிப்பூம்பட்டினத்திற்குப் புறத்தே உள்ள குடியிருப்புகளில் ஆட்டுக்கிடாய்களும் கௌதாரிகளும் விளையாடிக்கொண்டிருக்கும். போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நடுகின்ற நடுகல்லுக்குக் கேடயங்களை வரிசையாக நட்டு வைத்துச் செய்த வேலிபோல, நெடிய தூண்டிலைச் சார்த்திய, குறுகிய கூரையையுடைய குடியிருப்பின் நடுவில், நிலவில் உள்ள இருளைப்போல பரதவர்களின் மீன் பிடிக்கும் வலை கிடந்து உலரும் மணல் நிறைந்த முற்றத்தை உடைய வீடுகள் உள்ளன.
விழுதையுடைய தாழையின் அடிப்பக்கத்தில்
இருந்த வெண்டாளியின் குளிர்ந்த பூக்களால் செய்த மாலையை அணிந்து, கருப்பமுற்ற
சுறாமீனின் கொம்பை நட்டு, அதன் பக்கத்தில், தம் வீட்டில் உள்ள வலிமையான கடவுளுக்கு
மடலையுடைய தாழையின் மலரைச் சூடி, சொர சொரப்பான பனையின் கள்ளைப் பருகி, சிவந்த
முடியையுடைய கருமைநிறமுள்ள பரதவர் பசுமையான தழையை உடுத்திய கருமை நிறமுள்ள தம்
மகளிருடன் கூடி, பரந்த பெரிய கடல்மீது மீன் பிடிக்கப் போவதற்கு விரும்பாமல்,
முழுநிலவு நாளன்று தாம் விரும்பும் உணவை உண்டு விளையாடுவர்.
காவிரி கடலில் கலக்கும் இடத்தில் விளையாட்டுகள்
புலால் நாற்றத்தையுடைய மணலையும் பூக்களையுமுடைய கடற்கரையில், கரிய மலையைச் சார்ந்த மேகத்தைப்போலவும், தாயின் முலையைத் தழுவிய குழந்தைபோலவும் தெளிந்த கடலோடு காவிரி கலக்கும் புகார்முகத்தில், தீவினை நீங்குவதற்காகக் கடலில் குளித்தும், உடலில் படிந்த உப்பைக் கழுவுவதற்காக நீரில் குளித்தும், நண்டுகளைப் பிடித்து ஆட்டியும் வலிய அலைகளில் விளையாடியும், மணலால் பொம்மைகளைச் செய்தும், ஐம்புலன்களால் அடையக்கூடிய இன்பங்களை எல்லாம் நுகர்ந்தும், நீங்காத விருப்பத்துடன் பகல் முழுதும் மக்கள் விளையாடுவர். நீர்வளம் பொய்க்காத மரபோடு, பூக்கள் நிறைந்த காவிரிப்பூம்பட்டினம் தொன்மையான சிறப்புடைய சுவர்க்கத்தைப்போல் இருக்கும்.
தம் கணவரோடு கூடிய இளம்பெண்கள் தாம் முன்பு அணிந்திருந்த பட்டாடையை நீக்கிப் பருத்தி ஆடையை உடுத்தினர். கள் குடிப்பதைத் தவிர்த்து மது அருந்தி மகிழ்ந்திருந்தனர். மதுவுண்ட மயக்கத்தில், கணவர் சூடிக்கொள்ளும் மாலையை மகளிர் சூடிக்கொண்டனர்; மகளிர் அணியும் மாலையைக் கணவர் அணிந்துகொண்டனர்.
காலையில், படகுகளில் மீன்பிடிக்கச்
சென்ற பரதவர், நெடிய தூண்களையுடைய மாடி வீடுகளில், அணைந்துபோன விளக்குகள் போக
எஞ்சியிருக்கும் ஒளியுடன்
எரிந்துகொண்டிருக்கும் விளக்குகளை எண்ணுவர்.
காவிரிப்பூம்பட்டினத்தில் வாழும் ஒருசிலர், பாடல்களைக் கேட்டும், நாடகங்களை
விரும்பிப் பார்த்தும் இன்புறுவர். வேறுசிலர், வெண்ணிலவால் உண்டாகிய இன்பத்தை
நுகர்வர். இவ்வாறு இரவில் இன்பம் துய்த்தவர்கள் இரவின் கடைசிப்பகுதியில் (இரவு
மூன்றுமணி முதல் காலை ஆறுமணி வரை) கண் அயர்ந்து உறங்குவர்.
பெரிய காவிரியாறு கொண்டுவந்து குவித்த பூமணத்தோடு கூடிய தூய மணற்குவியலில் உறங்கி, வெண்மையான பூங்கொத்தையும் மடலையும் உடைய தாழை நிறைந்த கடற்கரையில் உள்ள அகன்ற தெருவில், நல்ல அரசனுடைய பொருளைப் பிறர் கொள்ளாமல் பாதுகாக்கும் தொன்மையான புகழையுடைய சுங்கவரி வசூலிப்பவர்கள் சுடுகின்ற சினத்தையுடைய கதிரவனின் தேரில் பூட்டிய குதிரைகளைப் போல் நாள்தோறும் சோம்பலில்லாமல் குறைவின்றி சுங்கம் வசூலிப்பர்.
காவிரிப்பூம்பட்டினத்துப் பண்டசாலை
தான் கடலிலிருந்து முகந்த நீரை மேகம் மலையில் பொழிந்து, மலையில் பெய்த நீர் ஆற்றின் வழியாகக் கடலில் பரவும் மழை பெய்வதைப்போல, நீர் வழியாக வந்த பொருட்களை நிலத்தில் இறக்குமதி செய்யவும், நிலத்தில் விளைந்த பொருட்களைக் கடல் வழியாக ஏற்றுமதி செய்வதற்காக மரக்கலங்களில் பரப்பவும், அளந்து அறிய முடியாத அளவுக்குப் பலபொருட்கள் எல்லையின்றி வந்து குவிந்து கிடக்கும். அவை கடுமையான காவலுடைய சுங்கச் சாவடியில், வரி கொடுக்காமல் இருப்பவர்களுக்கு அச்சத்தைத் தரும் பெருமைக்குரிய சோழ மன்னனின் அடையாளமான புலிச் சின்னத்தைப் பொறித்து, புறத்தே உள்ள முற்றத்தில் வைக்கப்பட்டிருக்கும். மதிப்பிடப்பட்ட பல்வேறு பண்டங்களைப் பொதிந்து அடுக்கிய மூட்டைக் குவியலின் மேல் கூர்மையான நகங்களையும் வளைந்த கால்களையும் உடைய ஆண்நாய்களும் ஆட்டுக்கிடாய்களும் குதித்து விளையாடுவது, மேகங்கள் உலாவும் உச்சியையுடைய பெரிய மலையின் பக்க மலைகளில் வருடைமான்கள் விளையாடுவது போல் காட்சி அளிக்கும்.
மாளிகையின் அமைப்பும் கடைத்தெருவும்
நெருக்கமாகக் கட்டப்பட்ட பல படிகளையுடைய நீண்ட படிக்கட்டுக்களோடு கூடிய திண்ணையும், பல அறைகளையும், சிறிய வாயிலும் பெரிய வாயிலும், வாயில் வழியாக மாளிகைக்கு உள்ளே செல்லும் நீண்ட உட்பகுதியையும் உடையதாக, மேகம் தவழும் அளவுக்கு உயர்ந்த மாளிகைகள் காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ளன. அந்த மாளிகைகளில் உள்ள சாளரங்களுக்கு அருகே நின்றுகொண்டு, அழகிய பெண்கள் தங்கள் கைகளைக் கூப்பி, முருகனுக்கு வெறியாட்டு நடைபெறுவதைக் காண்பர். மகளிர் பாடும் இசையோடு பொருந்தி புல்லாங்குழல் இசைக்க, யாழ் ஒலிக்க, மத்தளம் அதிர, முரசு முழங்க இடைவிடாமல் விழாக்கள் நடைபெறும் அகன்ற கடைத்தெருக்களை உடையது காவிரிப்பூம்பட்டினம்.
காவிரிப்பூம்பட்டினத்தில் பல்வேறு கொடிகள்கோயில் வாயிலில் பலர் தொழும் கொடிகள் உயர்த்தப்பட்டிருக்கும். கடற்கரையில், சமைத்த உணவுள்ள கூடை மேலும், கீழே விரித்த துணியில் வைக்கப்பட்டிருந்த மென்மையான தின்பண்டங்கள் மேலும், வெள்ளை அரிசியைப் பலியாகத் தூவி மக்கள் வழிபடுவர். அங்கு, சாணியைக் கொட்டி மெழுகிய இடத்தில், வேலின் காம்பை நட்டு அதன் மேல் கவிழ்த்து வைக்கப்படிருந்த கேடயங்களின் மேல் கொடிகள் இருக்கும். கல்வி கேள்விகளில் சிறந்த அறிஞர்கள் வாதம் புரிவதற்காக உயர்த்தப்பட்ட மேன்மை பொருந்திய கொடிகள் பறக்கும். கப்பல்கள் நிறைந்த இடத்தில், கப்பல்களின் உச்சியில் ஏற்றப்பட்டுள்ள கொடிகளும் உயர்த்தப்பட்டிருக்கும். கள் விற்கும் வீடுகளில், தெய்வத்திற்குப் பலிகொடுக்கும் கதவுகளில் கள் விற்பதைக் குறித்துக் கட்டிய கொடிகளும் இருக்கும். மற்றும் பல்வேறு பணடங்களை விற்பதைக் குறித்து ஏற்றப்பட்ட பலகொடிகளும் மிகவும் கலந்து, பல வண்ணங்களும் வடிவங்களும் உடைய கொடிகளின் நிழல் இருப்பதால், எங்கும் நுழைகின்ற கதிரவனின் கதிர்கள் நுழைய முடியாத அளவுக்குச் செழுமையான நகரம் காவிரிப்பூம்பட்டினம்.
காவிரிப்பூம்பட்டினத்தின் வளம் பல நிறைந்த தெருக்கள்
தேவர்கள் காவிரிப்பூம்பட்டினத்தின் எல்லையைப் பாதுகாப்பதால், கடல் வழியாக வந்த குதிரைகளும், வண்டிகளின் வழியாக வந்த கரிய நிறமுள்ள மிளகு மூட்டைகளும், வடக்கே உள்ள மலைகளில் விளைந்த மாணிக்கமும் பொன்னும், மேற்கே உள்ள மலைகளில் விளைந்த சந்தனமும் அகிலும், தென்கடலில் பிறந்த முத்தும், கிழக்குக் கடலில் கிடைத்த பவளமும், கங்கை ஆற்றின் நீர்வளத்தால் விளைந்த பலபொருட்களும், காவிரி ஆற்றின் நீர்வளத்தால் உண்டாகிய பொருட்களும், ஈழத்தில் இருந்து வந்த உணவுப்பொருட்களும், மியான்மாரில் (பர்மாவில்) உண்டான பொருட்களும், மற்ற அரிய பொருட்களும், பெரிய பொருட்களும், நிலம் நெளியுமாறு திரண்டு பலவகை வளங்களும் கலந்து கிடக்கின்ற அகன்ற தெருக்களை உடையது காவிரிப்பூம்பட்டினம்.
காவிரிப்பூம்பட்டினத்தில் வாழும் மக்களின் மாட்சிமை
காவிரிப்பூம்பட்டினத்தில் மீன்களும் விலங்குகளும், நீரிலும் நிலத்திலும் இனிதே உறங்கி, ஒன்றாக இருந்து, தங்களுடைய இனத்தைப் பெருக்கி வாழ்கின்றன. அங்கே, மீன் பிடிப்பவர்கள் தம்மைக் கொல்லும் பகைவர்கள் என்று எண்ணாமல் அவர்களின் முற்றத்தில் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. இறைச்சியை விலை கூறி விற்பவர்கள் தங்கள் பகைவர்கள் என்று எண்ணாமல், அவர்கள் வாழும் குடிசைகள் இருக்கும் இடத்தில் விலங்குகள் திரண்டு நிற்கின்றன. மீன் பிடிப்பவர்களும் இறைச்சி விற்பவர்களும் தாங்கள் கொலை செய்வதைத் தவிர்த்தனர். திருடுபவர்கள் திருடுவதைத் தவிர்த்தனர். உழவர்கள் தேவர்களைப் போற்றி, வேள்விகளை விரும்பிச் செய்தனர்; நல்ல பசுக்களையும் எருதுகளையும் பாதுகாத்தனர்; ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை ஓதும் அந்தணர்களின் புகழைப் பரப்பினர்; விருந்தினர்களுக்குப் பண்டங்களைச் சமைத்துக் கொடுத்தும், அரிசியைப் பிறர்க்குக் கொடுத்தும் அறச்செயல்களைக் குறைவில்லாமல் செய்தனர். இவ்வாறு, உழவர் அமைதியான வாழ்க்கை வாழ்ந்தனர்.
வணிகர் குடிச் சிறப்பு
நடுவுநிலைமை தவறாத நல்ல நெஞ்சினையுடைய வணிகர், பழிக்கு அஞ்சி வாய்மை பேசி, தம்முடைய பொருட்களையும் பிறருடைய பொருட்களையும் சமமாக மதித்து, பிறரிடம் இருந்து பொருட்களை அதிகமாக வாங்காமலும், தாம் பிறருக்குக் கொடுக்கும்பொழுது குறைவாகக் கொடுக்காமலும், பல பண்டங்களையும் நியாயமான விலை கூறி விற்கும் வணிகர்களின் இருப்பிடமாகக் காவிரிப்பூம்பட்டினம் உள்ளது.
புலிக்குட்டி கூட்டுக்குள் வளர்ந்தாற்போல், பகைவர்களது சிறையிலிருந்த திருமாவளவன், தனக்குரிய வலிமையும் மனவுறுதியும் அதிகரித்து, ஏறுதற்கு அரிய கரையைக் குத்தி இடித்து, பெரிய தும்பிக்கையை உடைய ஆண்யானை தன் துணையாகிய பெண்யானையை நோக்கிச் சென்றதைப்போல், தன் நுண்ணறிவால் அறிந்து, ஆராய்ந்து, பகைவரின் நெருக்கமும் வலிமையுமுடைய சிறையின் மதிலின்மீது ஏறி, வாளை உறையிலிருந்து எடுத்துப் போரிட்டு, அச்சம் பொருந்திய தன் அரசுரிமையைப் பெற்றான்.
திருமாவளவன் போர் நடத்துவதற்குமுன், பகைவர்களின் நாடுகளில் உள்ள வயல்களில் கரும்பும் நெல்லும் நீண்டு வளர்ந்திருந்தன. குவளை மலர்களோடு நெய்தற் பூக்களும் நீர்நிலைகளில் கலந்து வளர்ந்திருந்தன. அங்கு, முதலைகள் செருக்குடன் இருந்தன. போருக்குப் பிறகு, அங்கிருந்த நீர்நிலைகளில் அறுகம்புற்களும் கோரைப்புற்களும் நீண்டு வளர்ந்து, வயல்களும் நீர்நிலைகளும் வேற்றுமையின்றித் திரிந்து, நீர் இல்லாமல் இருந்தன. அங்கே ஆண்மான்களும் பெண்மான்களும் ஓடித்திரிந்தன.
திருமாவளவனின் போருக்குமுன், பகைவர்களின் மன்றங்களில் கூத்தர்கள் ஆடும் ஆட்டத்திற்கு ஏற்ப, முழவின் ஓசையும், யாழின் இசையும் சேர்ந்து ஒலிப்பதை மக்கள் கேட்டு மகிழ்வர். இப்பொழுது, அந்த மன்றங்களில் அத்தகைய விழாக்கள் நடைபெறவில்லை; நரிகள் ஊளையிடுகின்றன; அங்கு, கோட்டான்களும் ஆண்டலை என்னும் பறவைகளும் ஓலியெழுப்புகின்றன; ஆண்பேய்களின் கூட்டத்தோடு, பெண்பேய்கள் தங்கள் தலைமயிரை விரித்து ஆடிக்கொண்டு பிணங்களைத் தின்கின்றன.
திருமாவளவனின் போருக்குமுன், பகைவர்களின் செழுமையான ஊர்களில்
உள்ள நல்ல இல்லங்களின் திண்ணையில் பசுங்கிளிகள் பால் உண்டன. அந்த இல்லங்களின் அடுக்களைகளில் விருந்தினர்கள் இடையறாது உண்டும், குறையாத அளவுக்கு சோறு இருந்தது. போருக்குப் பிறகு, நெற்கூடுகளில் இருந்த நெல்லைக் கொள்ளையர்கள் கொள்ளை அடித்ததால், இப்பொழுது வெற்றிடமாக இருக்கும் நெற்கூடுகளின் உள்ளே இருந்து கோட்டான்கள் கூவுகின்றன. அரிய காவலையுடைய பகைவர்களின் ஊர்கள் இப்பொழுது அழகிழந்து காணப்படுகின்றன.
”இவன் மலைகளைச் சுவடு தெரியாமல், முற்றிலும் இல்லாதவாறு தோண்டுவான்; கடல்களைத் தூர்ப்பான்; வானத்தை வீழ்த்துவான்; காற்றின் திசையை மாற்றுவான்; கருதியதைக் கருதியவாறே செய்து முடிக்கும் வல்லமை உடையவன்.” என்று அனைவரும் திருமாவளவனைப் புகழ்ந்து கூறுவர்.
திருமாவளவன் தன் நாட்டில் இருந்த காடுகளை அழித்து, குடிமக்கள் வாழ்வதற்கேற்ற இடமாக்கினான்; குளங்களைத் தோண்டி, பல்வேறு வளங்களையும் பெருக்கினான்; பெரிய நிலையுடைய மாடங்களையுடைய உறையூரை விரிவுபடுத்தி, அங்கு, கோயில்களையும் குடிமக்கள் வாழ்வதற்குரிய இடங்களையும் அமைத்தான்; பெரிய வாயில்களோடு சிறிய வாயில்களையும் உண்டாக்கி, மதில்களில் வீரர்கள் மறைந்திருந்து அம்பெய்தற்குரிய இடங்களில் அம்புக் கூட்டை நிறுவினான்; “போர் செய்வேன்” என்று சூளுரைத்து, ”போர்க்களத்தைவிட்டு அகலமாட்டேன்” என்று கூறி, புறங்கொடாது வீரத்தோடு இருந்தான். வீரத் திருமகள் நிலைத்த பெரிய நிலையான அவனது கோட்டை மதில், மின்னலைப் போன்று ஒளி வீசியது. திருமாவளவனின் வெற்றியும் புகழும் உலகெலாம் மின்னலைப்போல் ஒளி வீசியது. திருமாவளவனின் புகழைக் கேட்டு, தங்கள் புகழ் கெட்டுவிடுமோ என்று அஞ்சி, பகைவர்கள் அவன் கால்களில் வீழ்ந்து வணங்கினர். திருமாவளவன் சிங்கத்தைப் போன்ற வலிமையோடு விளங்கினான்.
தலைவன் தலைவியைப் பிரியாமல் இருப்பதற்குக் காரணம்
”நான்
செல்லவிருக்கும் காடு திருமாவளவன் பகைவரை நோக்கி எறிந்த வேலைவிடக் கொடியது. என்
தலைவியின் பெரிய மென்மையான தோள்கள் அவனுடைய செங்கோலைவிடக் குளிர்ச்சியானவை. மக்கள்
அனைவரும் இனிதாக வாழும் சிறப்புடைய காவிரிப்பூம்பட்டினத்தை நான் பெற்றாலும், நீண்ட
கரிய கூந்தலையுடைய, ஒளிபொருந்திய அணிகலன்களை அணிந்த என் தலைவியைவிட்டுப் பிரிந்து
உன்னோடு வரமாட்டேன். நெஞ்சமே நீ வாழ்க!’ என்று தலைவன் தன் நெஞ்சத்தை நோக்கிக்
கூறுகிறான்.
Comments
Post a Comment